Sunday, March 25, 2012

“சம்ஸ்க்கிருதமும் தமிழும் பாரதத்தாயின் இரு கண்கள்”-By Sridhar


சம்ஸ்க்கிருதமும் தமிழும் பாரதத்தாயின் இரு கண்கள்
என்று நான் மேலோட்டமாக நான் எதையோ சொல்லப்போக மூச்சுமுட்டும் வேகத்தில் விழுந்தன சிந்தனைத்துளிகள்ஸ்ரீதரிடமிருந்து – நாணிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல்  பெயரிலேயே அவர்  ’ஸ்ரீ’ யை வைத்திருப்பதால் நான் இன்னுமொரு ’ஸ்ரீ’ போடவிரும்பவில்லை அனர்த்தமாகிவிடுமென்பதால். அவருடைய மடலின் வெப்பத்தாக்குதலை   தாங்கும் சக்தியில்லாததால் உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தேன் கொட்டிவிட்டேன் இப்போது – நீங்கள் பிடிக்க..............., மேலே படிக்க ..............
இப்படிக்கு
கலிவரதன்
உயர்திரு. கலிவரதன்ஜி அவர்களுக்கு வணக்கம்
“தொல்காப்பியத்திற்கு விளக்கவுரை தந்த தமிழ்மேதை உ.வரதராசனார் அவ்வுரையில் என்ன   கூறுகிறார் தெரியுமா?.
தொல்காப்பியம் சிறப்புப்பாயிரத்தில் தொல்காப்பியர் ‘வடமொழி இலக்கணம் நிறைந்த தொல்காப்பியர்’ என்று அழைக்கப்படுகிறார். அவருடைய மாணவரானஅதங்கோட்டாசிரியர் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்’என்று அழைக்கப்படுகிறார்.தமிழின் இலக்கண நூல்களிலே மிகத்தொன்மையானது தொல்காப்பியம்; தொல்காப்பியத்திலேயே சமஸ்க்ருதத் தொடர்பு சிறப்பாகப் பேசப்படுகிறது.
இன்னொன்று சிலப்பதிகார பாடலில் ஒரு வெண்பா வருகிறது என்ன தெரியுமா.
‘தம்பியோடு காட்டிர்க்கு  சென்று இலங்கையை  வென்றவன்  இராமன்  அவனுடைய மகிமையைக் கேளாதவர்களுக்குக் காது எதற்கு?’ என்று கேட்கிறார் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள். அவர் வாழ்ந்த (சங்க காலம்)  காலத்தில்  கம்பனே பிறக்கவில்லையே ஆக    வால்மீகியின்  ராமாயணத்தை  இளங்கோவடிகள் அறிந்திருக்கிறார் என்றுதானே தெரிகிறது
.மணிமேகலையில் மாதவி சம்ஸ்க்ருதத்தில் உரையாடியதாகச் சொல்லப்படுகிறது.
’ஊன்பொதி பசுங்குடையார்’ என்ற புறநானூற்றுப் புலவரின் பாடலில் கிஷ்கிந்தா காண்டத்தின் காட்சி சொல்லப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை ‘வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி’ என்று வாழ்த்துகிறார்.’
வடமொழியும் நமது நாட்டுமொழி தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து’ என்றார் திரு.வி.க.
‘சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்கிறார் அண்ணா பல்கலகழக  முன்னாள் துனைவேந்தரான கல்வியாளர் வா. செ. குழந்தைசாமி.
தமிழ்வளத்தையும் தமிழர் நலத்தையும் விரும்புகிறவர்கள் சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பதில்லை.எப்படியாவது தமிழர்களை பாரதத்திலிருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்று நோக்கமுடையவர்கள்தான் சம்ஸ்க்ருத எதிர்ப்பாளர்கள். 
ஆகவே நல்லறிவுடையோர் இந்த மோதல் போக்கை அடையாளம் கண்டு விலக்க வேண்டும்.
தமிழர் வாழ்விலும் வழக்கிலும் சம்ஸ்க்ருதம் அன்றும் இன்றும் அழகு சேர்க்கும் அணிகலனாகத் தொடர்கிறது.
சம்ஸ்க்ருதம் பகுத்தறிவுக்கு விரோதமா அல்லது சமஸ்கிருத   நுல்கள்தான்  பகுத்தறிவுக்கு  விரோதமா.

’நான் கூறியது யாவையும் ஆராய்ந்து பிறகு உன் விருப்பப்படி செயல்படு’என்கிறார் பகவான் கிருஷ்ணன். அர்ச்சுனன் மீது அவர் எதையும் திணிக்கவில்லை.
 ஆக  பகவத் கீதை . சுயமரியாதை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாட வேண்டிய நூல் இது. அறிவைக் கொண்டு அனுபவத்தைச் சோதிக்கச் சொல்லும் பகுதிகள் சமஸ்க்ருதத்தில் ஏராளம்.

பகவத்கீதைக்கே உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்;அனுபவம் தான் பிரமாணம் என்கிறார்’.‘
இந்திய மொழிகளிலேலே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்யாசென்
ஆக இது வல்லவா நேர்மையான பகுத்தறிவு.
நமது   அரசியல்வாதிகளில் சிலர் ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு ஹிந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல;
தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய  மூ வா அவர்கள் அதில் என்ன சொல்கிறார் தெரியமா?‘வடமொழியில், இலக்கியச் செல்வத்தையும் சமயக் கருத்துகளையும் கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள்.
வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த தண்டி என்ற தமிழர்.
அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் சங்கரர் தென்னிந்தியர்.
விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் இராமாநுசர்காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர்.
‘தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது வேள்ளையகளின் ஆட்சி காலத்தில் பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைதான் தற்போது பதுங்கு குழியாக மாற்றி கொண்டு வசிக்கிறார்கள் பலர். இதனை முதன்முதல் துவக்கிய பெருமை மறைமலை அடிகள் என்று தனது பெயரினை மாற்றிகொண்ட வேதாசலம் அவர்களே. 
தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்கள் பற்றி பண்டிதமணிகதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் தஞ்சையில் ஒரு போது மேடையில் விவாதம் கரந்தையில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது ‘சங்க நூல்கள் எல்லாம் தனித்தமிழ் நூல்கள்; அவை வடசொல் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார்.
பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக ‘ சங்கநூல்களில் சிறந்ததும் கற்றறிந்தோர் போற்றுவதுமான கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய வடசொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார்.
அடிகளார் அடங்குவதாக இல்லை, தேவார, திருவாசகங்கள் தனித்தமிழில் ஆக்கப்பட்ட தென்று கூறினார்.உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் தேவாரத்தில்முதல் பதிகத்தில்‘சலம் பூவோடு தூபம்மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் வடசொல் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.
அடிகளாருக்குக் கோபம் வந்துவிட்டது; கோபமாக மேசையைக் குத்தினார்.‘
எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்; என்றார் பண்டிதமணி.‘When you are strong in law, talk the law;  When you are strong in evidence, talk the evidence; When you are weak in both, thump the desk ‘ என்ற வழக்கறிஞர்களுக்கான வாசகத்தை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது.
சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழிஅல்ல என்பதைச் சொல்லிகொண்டு வருகிறேன் . இதுவரை சொல்லப்பட்ட கருத்துகளால் சமாதானம் அடையவில்லையெனில்  ஒரு வேண்டுகோள் தயவுசெய்து கீழே வரும் பட்டியலைப் பார்க்கவும்.மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் ….இவர்களெல்லாம் தமிழகத்தில் பரவலாக அறியப்படுபவர்கள். இவர்களுடைய பெயர்கள் எல்லாம் சமஸ்க்ருதத் தொடர்புடையவை. அரசியல், திரைப்படம்,கலை,  இசை,  இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சமஸ்க்ருதப் பெயர் கொண்டவர் முன்னணியில் இருக்கிறார்.
நூற்றாண்டுகளாகத் தனித்தமிழ் இயக்கம் நடந்த பிறகும் இதுதான் நிலைமை.தமிழகமெங்கும் பல ஊர்ப் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது. ஆனால் அவை சமஸ்க்ருத பெயர்கள் என்பதுதான் உணரப்படவில்லை. உங்கள் கவனத்திற்காக இதோ அந்தப் பட்டியல்;முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் இருப்பிடமான கோபாலபுரமும், ஜி.கே. வாசனின் ஊரான கபிஸ்தலமும் சமஸ்க்ருதப் பெயர்களே.
தொடர்கின்ற மற்ற ஊர்களையும் பாருங்களேன்.திரிசூலம், மகாபலிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், விருத்தாசலம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், ஜெயங்கொண்டான், கங்கை கொண்ட சோழபுரம், சுவாமிமலை, வேதாரண்யம், மகாதானபுரம், கோவிந்தபுரம், ஸ்ரீ ரங்கம், தர்மபுரி, மகேந்திரமங்கலம், அம்பாசமுத்திரம், ராமகிரி, கிருஷ்ணாபுரம், தென்காசி, சதுர்வேதமங்கலம், திரிபுவனம், ஸ்ரீ வைகுண்டம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, வாணசமுத்திரம், தனுஷ்கோடி, அனுமந்தபுரம், வாலிகண்டபுரம், ராஜபாளையாம், ஸ்ரீ வில்லிபுத்தூர், குலசேகரபட்டினம், உத்தமதானபுரம், சிவகாசி, பாபநாசம், ஸ்ரீ நிவாசநல்லூர், பசுமலை, பட்சிதீர்த்தம், சுந்தரபாண்டியபுரம், சுவேதகிரி, ..
 இதுமட்டுமா?
முதன்மையான தமிழ் நாளிதழ்களின் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது.தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவை முதன்மையான தமிழ் நாளிதழ்கள்,
தினம் என்பது சமஸ்க்ருதச் சொல்.
இதுமட்டுமா இந்தியக் கலாச்சாரம், சமஸ்க்ருத வளர்ச்சி ஆகியவற்றில் பல்லாண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ‘பாரதிய வித்யா பவன்’ ஒரு காங்கிரஸ்காரரால் நிறுவப்பட்டது. அவர் கே எம் முன்ஷி
‘இந்தியாவின் செல்வங்களிலேயே அதிக சிறப்புடையது எது என்று என்னைக் கேட்டால் தயக்கமில்லாமல் நான் சம்ஸ்க்ருதம் தான் என்று சொல்லுவேன்’ என்றார் ஜவஹர்லால் நேரு.
வாழ்க்கை நமக்கு ஒரு வரப்ரசாதம் என்கிறார் காலை நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் யோகாசன  சொல்லித்தரும்  பெண்மணி. இந்த வரமும் பிரசாதமும் தமிழா, சமஸ்க்ருதமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் ஒரு முக்கியமானதொரு செய்தி சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.அந்த முக்கியப் புள்ளி முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர் கண்ணன். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன்.இந்தப் புத்தகத்தின் முன்னுரையில்‘மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு சமஸ்க்ருதத்தின் பாலுள்ள அன்பை அறிந்துகொண்டு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக்கொண்டு’ மொழிபெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.ஒரு முன்னாள்  முதல் அமைச்சரே மொழி மாற்றத்தை விரும்புகிறார் என்றால் அந்த மொழி, புழக்கத்தில் உள்ளதா, இல்லையா என்பதை உங்களது முடிவிற்கே விட்டு விடுகிறேன்.
ஆக தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் இசைவாக,இணையாக இறைமையாகக் கருதுவது வள்ளுவர் காலம் தொட்டுத் தொடர்ந்து வரும் ஒரு பண்டைய  தமிழ் மரபு.
தென் குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்த கணபதி ஸ்தபதிக்கு கட்டிடக் கலை தொடர்பான சம்ஸ்க்ருத நூல்கள் பயன்பட்டன என்று அவரே சொல்லியிருக்கிறார்.
தமிழ்ப் பற்றாளர்களுக்கு உணர்ச்சி ஊட்டியவர் கவிஞர் பாரதிதாசன்.
 அவருடைய கவிதை வரி ஒன்றைப் பார்ப்போமா!‘’ஊரின நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே’என்ற வரிகளில் ‘பத்திரிகை’ என்ற சம்ஸ்க்ருதச் சொல்லைத்தான் அவர் பயன்படுத்தி இருக்கிறார்.
இதழ், ஏடு என்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் செய்யப்படும் சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி பச்சையப்பன் கல்லுரி முன்னாள் முதல்வர் தமிழறிஞர் பேராசிரியர் அ ச  ஞானசம்பந்தம் கூறுகிறார்.‘உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒலியன்கள் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும்தான் நிறைந்து இருக்கின்றன. முள்ளை மலராக்கும் – கல்லைக் கனியாக்கும், காட்டை நந்தவனமாக்கும் வல்லமையை அந்த மொழி பெற்றிருப்பதால் தான் ஆண்டவனுக்கு அர்ச்சனை உரிய மொழியாக உயர்ந்து நிற்கிறது. தமிழ் என்னும் அமுதத்தால் இறைவனைக் குளிர்வித்தாலும் அது சிறப்புதான்.
கோயில்களிலிருந்து சம்ஸ்க்ருதம் அகற்றப்படவேண்டும் என்ற கூக்குரல் இப்போது கேட்கிறது அதற்காக சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி சொல்லவேண்டியதாயிற்று.
ஆக தமிழர் வாழ்வில் தனியாகப் பிரித்தெடுக்க முடியாதபடி சம்ஸ்க்ருதத்தின் தாக்கம் இருக்கிறது. நடுவில் வந்ததுதான் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிரித்தாலும் சூழ்ச்சிவலை – ஆரிய-திராவிட பிரிவினைவாதம். பிராம்மணர் அனைவரும் ஆரியர்-பிராம்மணரல்லாதோர் திராவிடர் என்ற மக்களை பிரித்த்தாளும் மாயமந்திரம். சம்ஸ்க்கிருதம் வடமொழி சம்ஸ்க்கிருதம் பேசும் ஆரிய பிராம்மணர் தமிழர்களின் எதிரிகள் என்பது.
உபநிடதங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியசுவாமி விவேகானந்தர் பிராமணரில்லை.இதிகாச தலைவர்களானராமனும், கிருஷ்ணனும் பிராமணர்கள் இல்லை. ராமன் க்ஷத்திரியன், கிருஷ்ணன் யாதவன்.வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வியாசர் பிராமணர் அல்லர். தெய்வீக அருள் பெற்ற கவிஞர்களான வால்மீகியும் காளிதாசனும் பிராமணர்கள் அல்ல.சோஷலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவும்சம்ஸ்க்ருத ஆதரவாளர்தான். இவரும் பிராமணரல்ல.‘உலகிலேயே புராண இதிகாசச் செழிப்புமிக்க நாடு இந்தியாதான். இந்தியாவின் மகத்தான இதிகாசங்களும் புராணங்களும் நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உள்ளங்களில் அறுபடாத பிடிப்பைக் கொண்டுள்ளன’ என்றார் டாக்டர் லோகியா.பிராமணர்,பிராமணரல்லாதார் என்ற வேலியைச் சுருட்டி வைத்து அந்த இடத்தில் வீதி உருவாகிவிட்டது.பொதிகை தொலைக்காட்சியில் வேளுக்குடி கிருஷ்ணன் நடத்தும் கீதை சொற்பொழிவுக்கு எல்லாத் தரப்பிலும் நல்ல வரவேற்பிருக்கிறது.
ஆக தமிழுக்கு ஆபத்து சம்ஸ்க்ருதத்தால் வராது. அது வேறு திசையிலிருந்து வருகிறது. அந்த ஆபத்தின் பெயர் ஆங்கிலம். அதுதான் தற்பொழுது பிரபலமான பல தொலைகாட்சிகளிலும் தமிழாக பேசப்படுகிறது. யோசித்துச் சொல்லுங்கள் நான் காத்திருக்கிறேன் என்று பேச வேண்டியவர்‘திங்க் பண்ணிச் சொல்லுங்க, நான் வெயிட் பண்றேன்’ என்கிறார்.
நவத்துவாரங்கள் வழியாகவும் ஆங்கிலம் உள்ளே போய்க் கொண்டிருக்கிறது. தமிழைக் காக்க விரும்புவோர் முதலில் காயசுத்தி செய்துகொள்ள வேண்டும். மற்றபடி சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து இல்லை. தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.
நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை உலகில் எதற்கும் அஞ்சா உண்மை – எங்கு சென்றுவிட்டன பாரதப்பண்புகள்?  நக்கீரன் பரம்பரையில் வந்த நாம்தான் குறுகிய கால நலன்களுக்காக நீண்ட பாரம்பரியமிக்க உயர்ந்த தமிழ்-சம்ஸ்க்கிருத உறவாடலை கொச்சைபடுத்துகிறோமோ? அல்லது காலத்தின் கோலத்தால் எதிர்வரும் வெள்ளத்தின் வேகத்தைக்கண்டு மிரண்டுவிட்டோமா?   இதையறிந்துதான் வள்ளுவன் முன்பே இப்படிக்கூறுகிறானோ?
“வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்”
வாழ்க  செந்தமிழ் வாழ்க நற்றமிழ் வாழ்க பாரத மணித்திருநாடு வந்தேமாதம்... வந்தேமாதம்... ஜெய வந்தே மாதரம்
நன்றி


ஸ்ரீதர்
சென்னை
 

1 comment:

  1. தமிழுக்கு ஆபத்து ஆங்கிலத்தால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. தாங்கள் தந்த உதாரணம் தினசரி எதிர்கொள்ளக்கூடிய ஒன்று. சம்ஸ்கிருதம் ஒலியன்கள் அசாதாரண விளைவுகள் கொண்டவை என்பது பல அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை. மஹா பெரியவர்கள் ஒரு விளக்கத்தில் அதனால் தான் வேதங்கள் வாய் மொழியாக சொல்லப்பட்டன அன்றி எழுதப்படவில்லை என்றார்கள். நம் ஆதார வேர்களை வெகு வேகமாக இழந்து கொண்டிருப்பதும் அதற்கு மேற்கத்திய நாகரிகமும், உணவுப் பழக்கங்களும், சமூக மதிப்பீடுகளும் ஒரு முக்கிய காரணங்களாய் இருப்பதும் மறுக்க முடியாதவை. நல்ல தகவல்கள் நிறைந்த ஒரு கட்டுரை. பதிவீட்டுக்கு நன்றி. சந்திரசேகரன்

    ReplyDelete